உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் எண்ணிக்கை சரிபார்க்கப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் கொவிட் நிலவரம் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, கொவிட் 19 நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு நடவடிக்கைகளின்போது தற்போது கிருமித் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும் சரிபார்க்கப்படும்.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்வதன் மூலம், கொரோனா பாதிப்பின் சரியான நிலவரம் தெரிய வரும் என்றும் அதன்மூலம் நோய்த்தடுப்பு, தொற்று மேலாண்மை தொடர்பில் சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் தமிழக அரசு கருதுவதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
தமிழக சுகாதார மற்றும் நகராட்சிகளின் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது கொரோனா விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விவரித்தார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் தொடர்பான எண்ணிக்கையைப் பதிவு செய்யும்போது தவறான தகவல்கள் இடம்பெறக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.