தூத்துக்குடி: டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை நேற்று ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைவாக முடிக்கும் நோக்கில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
"அதன்படி தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் உள்ளாட்சித் துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இன்று ஆய்வு செய்துள்ளோம். தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும் சாலைகளை சீர்செய்திடவும் திட்டப்பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
"நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு முதல்வர் கூறியுள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
"திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்," என்றார் கே.என். நேரு.