சென்னை: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இதுதொடர்பான பதில் மனுவை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கல் செய்தார். அதில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.
"விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை. ரசிகர்களாகவே இருப்பது போல் நினைத்துக்கொண்டு தொடர்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், "எஸ்.ஏ. சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை. இப்போதும் இருக்கிறது," என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு என்ற செய்தியால் குழம்பிப்போன நிர்வாகிகளும் ரசிகர்களும் விஜய் தரப்பு வெளியிட்ட அறிவிப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்.