சென்னை: கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக கடந்த சில வாரங்களாக ஞாயிறுதோறும் தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைக்கப் பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் அத்தகைய மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மக்கள் பயன் அடை வார்கள் என்று அமைச்சர் மா. சுப் பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை மாநகராட்சியில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 83% பேர் முதல் தவணையும் 40% பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் தமிழகத்திலேயே சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது," என்றார்.
"நாளை (அக்டோபர் 10) நடைபெறும் முகாமில் அதிகமானோர் பயனடைவார்கள். மக்கள் அவர் களது வீட்டின் அருகிலேயே நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்," என்றும் அவர் நேற்று கூறினார்.
தமிழகத்தில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கையை 70 விழுக்காடாக விரைவில் உயர்த்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
தற்போது முதல் தவணை தடுப்பூசியை 65 விழுக்காட்டினரும் இரண்டாவது தவணை தடுப்பூசியை 22 விழுக்காட்டினரும் போட்டு உள்ளனர். கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் மெகா கொவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதையடுத்து கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற 2வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும் 26ஆம் தேதி நடந்த 3வது முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டனர். 4வது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகம் முழுவதும் 5வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன.