சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளம் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகின.
இதையடுத்து, தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவினர் இரண்டு பிரிவாகப் பிரிந்து கடந்த மூன்று நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
"மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 24 ஏக்கர் நெற்பயிருக்கு 40,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவுக்கு 12,000 ரூபாய் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கடலுார் மாவட்டத்தில் பெய்த கனமழை பாதிப்பால் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.