சென்னை: வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் ஜனவரி 12ஆம் தேதி உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான் என்றார்.
“எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழினம் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் என்று குறிப்பிட்ட அவர், இனத்தின் பெருமையைப் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூற கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள் என்றார்.வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகத்தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.