பழநி: கடந்த 422 ஆண்டுகளாக பழநி மலைக்குப் பாதயாத்திரையாக சென்று வரும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பழமைமிக்க வேல்கள் காணாமல் போய்விட்டதாகப் புகார் அளித்துள்ளனர். நத்தம் அருகே இச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் இருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் காவடி எடுத்து, வேல் ஏந்தி பாதயாத்திரையாக பழநி மலைக்குச் செல்வது வழக்கம்.
அந்த வேல்களுக்கு முதலில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையில் வைத்து அபிஷேகம் செய்யப்படும். அதன் பின்னர் பக்தர்கள் பழனி மலைக்குப் புறப்படுவர்.
அதேபோல் நடப்பு ஆண்டிலும் பாதயாத்திரையைத் தொடங்கிய பக்தர்கள், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) அன்று சமுத்திரப்பட்டி எனும் ஊரில் தங்கியிருந்தனர்.
அப்போது, தாங்கள் கொண்டு வந்த தாமிரப் பட்டையால் செய்யப்பட்ட இரண்டு வேல்கள், ஒரு வெள்ளிப் பீடம் உள்ளிட்ட பொருள்கள் திடீரென காணாமல் போனதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பலமணி நேரம் அவற்றைத் தேடியுள்ளனர். ஆனால் தேடலுக்குப் பின்பும் வேல் கிடைக்கவில்லை. எனவே புதிய வேல்களுக்கு பூசை செய்யப்பட்டு பக்தர்கள் தங்களது காவடி பாதயாத்திரையைத் தொடர்ந்தனர். புதிதாக கொண்டு சென்ற வேல்களை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காணிக்கையாக செலுத்தப் போவதாகவும் கூறினர்.