திண்டுக்கல்: ஐந்து நாள்களுக்குப் பிறகு பழநஇ மலைக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை ஐந்து நாள்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தடை நீங்கியதை அடுத்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தைப்பூச திருவிழாக் காலம் என்பதால் பழநி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச தேரோட்டத்தில் கலந்துகொண்ட எல்லோருமே நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
எனினும், இன்று நடைபெற உள்ள தெப்பத்தேர் உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலிலும் புதன்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடினர்.
இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையில் திரண்ட பக்தர்கள். படம்: ஊடகம்