சென்னை: நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஜல்ஜீவன் இயக்கம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், 60,000 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், இந்த நிதியில் இருந்து இதுவரை குறைந்த அளவே தமிழக அரசு பயன்படுத்தி இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், தமிழக அரசு முழுமையாக இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.