சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 85% மக்கள் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ், சி வோட்டர் ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதிய அரசுகள் அமைந்து ஓராண்டு காலம் கடந்துள்ள நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக ஐஏஎன்எஸ், சி வோட்டர் ஆகியன ஆய்வு ஒன்றை நடத்தின.
இதில், மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும் திருப்தி என 44% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தம் 85% பேர் அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
17%க்கும் குறைவானவர்களே அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக் கூறியுள்ளனர்.
அதேபோல், அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி அளிப்பதாக 30% பேரும் திருப்தி என 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 13%க்கும் குறைவானவர்கள் அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என கூறியுள்ளனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேரும் திருப்தி தருவதாக 10% பேரும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ்-சி வோட்டர் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் மோடி பிரதமராக நீடிக்க 32% பேரும் ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல்.