கன்னியாகுமரி: அண்மையில் ஒரு தாயும் மகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை செய்யப் பட்டனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
"ஒரு பெண்ணைக் கேலி செய்த தாகக் கூறி என்னைக் கண்டித்த தால், எரிச்சலடைந்த நான் தாய்- மகளைக் கொன்று என் கோபத்தைத் தீர்த்துக்கொண்டேன்," என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின்மேரி, 48. சகாயராஜ் துபாயில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், பவுலின் மேரி வீட்டில் அவரது தாயார் திரேசம்மாளும், 90, வசித்து வந்தார்.
தனது வீட்டில் தையல் வகுப்பை நடத்திவந்த பவுலின் மேரியும் திரேசம்மாளும் கடந்த 7ஆம் தேதி கொல்லப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஐந்து தனிப்படை காவலர்கள் இந்த இரட்டைக் கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து துப்பறிந்து வந்தனர்.
தனிப்படை காவலர்களின் சோதனையில் பவுலின் மேரி வீட்டின் வெளிப்புறத்தில் ஆண் அணியும் ஒரு ஜோடி செருப்பும் குரங்கு குல்லாவும் கிடைத்தன.
இந்தப் பொருள்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அமல சுமன், 36, கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தில், "எனக்குத் திருமணமாகி விட்டது. எனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு நான் சூரப்பள்ளத்தில் வசித்து வருகிறேன். அவ்வப்போது கடியப்பட்டணத்தில் உள்ள பவுலின் மேரி வீடு வழியாகச் செல்வது வழக்கம்.
"அவ்வாறு கடந்த 1ஆம் தேதி நான் கடியப்பட்டணம் சென்று கொண்டு இருந்தேன். அப்போது பவுலின் மேரியின் தையல் வகுப்புக்குச் சென்றுவிட்டு ஓர் இளம்பெண் வெளியே வந்தார். அவரை சீட்டி அடித்து கேலி, கிண்டல் செய்தேன். உடனே அந்தப் பெண் பவுலின் மேரியிடம் கூறினார். பவுலின் மேரி என்னை அழைத்துக் கண்டித்ததால் சுத்தியலால் தாக்கி அவரையும் அவரது அம்மாவையும் கொலை செய்தேன்," என்றார்.