உயிர் காக்கச் சென்று உயிரிழந்தார்
சென்னை: விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டிராக்டர் மோதி விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் அங்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். அப்போது எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஓட்டுநர் ராஜேந்திரனும், விபத்தில் சிக்கிய காரில் வந்த இருவரும் உயிரிழந்தனர்.
பாயாசத்தால் வெடித்தது மோதல்
மயிலாடுதுறை: பாயாசம் சுவையாக இல்லை என்று கூறியதால் சீர்காழியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் மோதல் வெடித்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் உணவு பரிமாறப்பட்டபோது, பாயாசம் சுவையாக இல்லை என பெண் வீட்டார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடமைந்த மணகன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெண் வீட்டார் மீது சாம்பாரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோதல் வெடித்து, இருதரப்பினரும் நாற்காலி மேசைகளைத் தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
ஓட்டுநருக்கு மாரடைப்பு: பயணிகள் உயிரைக் காப்பாற்றிய நடத்துநர்
மதுரை: பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நடத்துநர் சாதுரியமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். மதுரையைச் சேர்ந்த 53 வயதான அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகேஸ்ராஜா, திருச்செந்தூரில் இருந்து மதுரைக்குப் பேருந்தை இயக்கினார். அதில் 62 பயணிகள் இருந்தனர். அருப்புக்கோட்டை அருகே வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனது இருக்கையிலேயே மயங்கிவிழ, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் அலறினர். அப்போது பேருந்து நடத்துநர் திருப்பதி, வேகமாகச் செயல்பட்டு, பேருந்தின் பிரேக்கை அழுத்தி அதை நிறுத்தினார். இதனால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.