சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது அக்கட்சி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இம்முறை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துக் களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி.
இந்நிலையில், இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக ஏசியாநெட் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ராஜா அம்மையப்பன் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தியாகராயர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சீமான் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும் வேட்பாளர் தேர்வில் அவரது தலையீடு அதிகமாக இருந்தது என்றும் பல நிர்வாகிகள் கருதுவதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு இரண்டு வாரங்கள்கூட இல்லாத நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் விலகக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.