கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிங்கப்பூர் குடிமக்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் $570 மில்லியன் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு மூலம் பலனடைய இருக்கிறார்கள்.
ரொக்கம் வரவு வைக்கப்படு
வதோடு தகுதியுள்ளோரின் மெடிசேவ் கணக்கில் தொகை நிரப்பப்படும். நிதி அமைச்சு நேற்று இதனை அறிவித்தது.
பொருள் சேவை வரி பற்றுச்சீட்டைப் பெறும் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு நாளை ஜூலை 3ஆம் தேதிக்குள் குறுந்தகவல் வாயிலாகவோ கடிதம் வாயிலாகவோ விவரம் தெரிவிக்கப்படும்.
கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களின் வங்கிக் கணக்கில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் $300 வரை நேரடியாக வரவு வைக்கப்படும். வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் இம்மாதம் 22ஆம் தேதிக்குள் அதனைச் செய்யலாம்.
அவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வங்கி பணப் பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்படும். எஞ்சியவர்களுக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் அவர்களின் அதிகாரபூர்வ முகவரிக்கு காசோலை மூலம் தொகை அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு முன்னர் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுக்குத் தகுதி பெற்றும் அரசாங்க வழங்கு தொகைக்குப் பதிவு செய்துகொள்ளாத சிறிய எண்ணிக்கையிலான குடிமக்கள் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
பதிவு செய்துகொள்ளுமாறு அடுத்த ஆண்டு 31ஆம் தேதிக்கு முன்னர் கடிதம் அல்லது குறுந்தகவல் வாயிலாக அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
2019 வருமான வரி கணக்கீட்டு ஆண்டில் $28,000க்கு மிகாத வருவாய் பெற்ற, 21 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சிங்கப்பூரர்கள் 150 வெள்ளியையோ 300 வெள்ளியையோ பெறுவர்.
2019 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி அவர்களின் வீட்டின் வருடாந்திர மதிப்பின் அடிப்படையில் இத்தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கு உரிமையாளராக இருந்தால் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுபெறும் தகுதியை அவர்கள் பெறமாட்டார்கள்.
இவ்வாண்டில் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சுமார் 545,000 சிங்கப்பூரர்கள் மெடிசேவ் கணக்கு நிரப்புதொகை வடிவில் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டைப் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் $450 வரை மெடிசேவ் கணக்கில் நிரப்பப்படும்.
வயது, வீட்டின் வருடாந்திர மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து $150க்கும் $450க்கும் இடைப்பட்ட தொகையை அவர்கள் நிரப்பு தொகையாகப் பெறுவர்.
ரொக்கமாக பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு வழங்கப்படுவதன் மூலம் $410 மில்லியனும் மெடிசேவ் கணக்கு நிரப்புதல் மூலம் $160 மில்லியனும் அரசாங்கத்திற்கு செலவாகும்.
பொருள் சேவை வரி மூலமான செலவுகளைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு பொருள் சேவை வரி பற்றுச்சீட்டை அரசாங்கம் அறிமுகம் செய்தது.
இந்தப் பற்றுச்சீட்டு ரொக்கம், மெடிசேவ் கணக்கில் நிரப்புதல், பயனீட்டுக் கட்டணக் கழிவு போன்ற மூன்று வடிவில் வழங்கப்பட்டு வருகிறது.
குைறந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற உதவியாக ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் ரொக்கம் வழங்கப்படுகிறது.
அதேபோல 65 மற்றும் அதற்கு மேல் வயதுடைய சிங்கப்பூரர்களின் மருத்துவத் தேவைகளைச் சமாளிப்பதற்காக அவர்களின் மெடிசேவ் கணக்கில் ஒவ்வோர் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் அவரவரின் தகுதிக்கேற்ப தொகை நிரப்பப்படுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பத்தினரின் பயனீட்டுக் கட்டணங்களை ஈடுகட்ட ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனீட்டுக் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள குடும்பத்தினருக்கு இவ்வாண்டுக்கான பயனீட்டுக் கட்டணக் கழிவு இரட்டிப்பாகிறது. ஒருமுறைக்கான சிறப்புத் தொகை கழிவாக வழங்கப்படுவதன் மூலம் இது உயருகிறது.
மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டரை மடங்கு கட்டணக் கழிவு இவ்வாண்டு கிடைக்கும்.
இவ்வாண்டு கொவிட்-19 கிருமிப் பரவலால் சிரமப்படும் சிங்கப்பூரர்களுக்கு கைகொடுக்கும் விதமாக நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் உதவித் திட்டங் கள் அறிவிக்கப்பட்டன.
$570 மி. பெறுமான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ஆகஸ்ட்டில் வழங்கப்படும்