மலேசியாவில் சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஏறத்தாழ 14,000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுள்ளது.
வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கவும் இதர உதவிகளைச் செய்யவும் ஆயுதப்படைகளும் காவல்துறையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாகாங் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 5,189 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.
சிலாங்கூரில் பருவ மழை காலத்தின்போது எப்போதாவதுதான் இப்படி நிகழும். அங்கு திடீரென வெள்ளம் ஏற்பட்டுவிட்டதால் ஒரே குழப்பமாகிவிட்டது என்று பிரதமர் இஸ்மாயில் சாஃப்ரி யாக்கோப் கூறியதாக தி ஸ்டார் தெரிவித்தது.
என்றாலும் பாகாங், கிளந்தான் போன்ற மாநிலங்களில் ஆண்டு இறுதியில் எப்போதும் மழை இருக்கும். அதனால் பாதிப்புகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் 5,731 நிவாரண நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் அவை 1.63 மில்லியன் மக்களுக்கு இடம் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவில் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. மார்ச்வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய மாமன்னர் சுல்தால் அப்துல்லா அகம்மது ஷா கோலாலம்பூரில் வெள்ள சூழ்நிலையை முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டார்.
இப்போதைய வெள்ள நிலைமை 1971ல் ஏற்பட்ட பேரிடர் அளவுக்கு இருப்பதாக மாமன்னர் தெரிவித்தார்.
இவ்வேளையில், கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், பாகாங்கில் மழை தொடரும் என்று மலேசிய வானிலைத் துறை நேற்று அதிகாலை எச்சரிக்கை விடுத்தது.
பல மாநிலங்களில் கடும் மழை பெய்யும் என்று அது ஆரஞ்சுநிற எச்சரிக்கையைப் பிறப்பித்தது.
இவ்வேளையில், கோலாலம்பூர்-கராக் விரைவுச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏராளமான வாகனங்கள் சாலையிலேயே தேக்கம் அடைந்தன. சமூக ஊடகங்கள் வெள்ளத்தைக் காட்டும் சாலைகளின் பல்வேறு படங்களை வெளியிட்டன.
மலேசிய மேற்குக் கடற்கரையிலும் மலாக்கா நீரிணையிலும் கடும் மழையும் வலுவான காற்றும் வீசக்கூடும் என்று சனிக்கிழமை தேசிய நீர்நிலை கண்காணிப்பு நிலையம் எச்சரித்தது.
சிலாங்கூரில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வர் அம்ருதீன் ஷாரி சனிக்கிழமை தெரிவித்தார்.