சிங்கப்பூரில் வீடுகளிலும் சமூகத்திலும் ஆங்கில நாட்டம் அதிகரிக்கிறது. இந்தச் சூழலில் இன்றைய பன்மொழி, பன்முக சமூகத்தில் தாய்மொழி கற்பதைப் பொருள்பொதிந்ததாகவும் ஏற்புடையதாகவும் நாட்டமிக்கதாகவும் ஆக்குவது என்பது ஒரு சவால்.
இந்தச் சவாலை புதுப்புது தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்கங்களின் மூலம், தமிழாசிரியர்கள் திறம்பட சமாளித்து வருகிறார்கள் என்று தொடர்பு, தகவல், சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்மொழி கற்பிப்பதில் இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ஆறு ஆசிரியர்களுக்கு நேற்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் சிறந்த பயிற்சியாசிரியர் விருதும் வழங்கப்பட்டன.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நடத்திய ‘நல்லாசிரியர் விருது 2022’ விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று டாக்டர் ஜனில் விருதுகளை வழங்கினார்.
விருதுபெற்ற ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கு தொடர் கற்றல் அவசியம் என்பதற்கு முன்னு தாரணமாக உள்ளனர். கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளை பிற ஆசிரியர்களுடன் பகிரும் பக்குவப்பட்ட ஆசிரியர் சமூகமாக உருவாகியுள்ளனர் என்றார் அமைச்சர்.
தமிழ் கற்பதற்கான பாதையைத் தொடர்ந்து உருவாக்கி வரும் சிங்கப்பூர், சிங்கப்பூரின் முன்னோடித் தமிழாசிரியர்கள் அமைத்திருக்கும் அடிப்படையைப் போற்றிப் பேண வேண்டும் என்ற அவர், வாழ்நாள் சாதனையாளர் விருதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.
மூத்த தமிழாசிரியர்களான திரு சாமிக்கண்ணு சிதம்பரம், திரு பொன்னழகு மாணிக்கம் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.
தாய்மொழி கற்றலைப் புதுப்பிக்கும் வழிகளைக் கண்டறிவதில் அமைச்சு பாடுபட்டு வருகிறது. பல மாணவர்கள் தங்கள் தாய்மொழியை ஆழமாகக் கற்க பல்வேறு வாய்ப்புகளை அது வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் அமைப்புகளும் சமூகப் பங்காளிகளும் தமிழ்மொழியையும் இந்தியக் கலாசாரத்தையும் மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வந்துள்ளனர். தாய்மொழி கற்பது உயிரோட்டமாகத் திகழ சமூகத்தின் பலத்தைத் திரட்டுவது முக்கியமானது என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தேசிய நாளிதழதான தமிழ் முரசு 1935ஆம் ஆண்டிலிருந்து தமிழ்மொழி கற்றலுக்கு ஆதரவளித்து வருகிறது. நாள்தோறும் வெளிவரும் பதிப்பிற்கு மேலாக, மாணவர்களுக்கு என்றே மாணவர் முரசு, இளையர் முரசு, பாலர் முரசு ஆகிய தனிப் பகுதிகளையும் இணையத்தில் மாணவர் புதிர் பகுதியையும் வெளியிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவையும் தமிழ் மொழி கற்றலுக்கு ஆதரவளிப்பதை அமைச்சர் சுட்டினார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற 21வது நல்லாசிரியர் விருது விழாவில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.