லொய்கோ, மியன்மார்: கைவிடப்பட்ட, வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட வீடுகளைத் தாண்டி, வண்டி ஒன்றில் மியன்மாரில் உள்ள ஜனநாயக ஆதரவு போராளிகள் ராணுவத்திடமிருந்து தங்களின் முதல் மாநிலத் தலைநகரை மீட்க அந்நாட்டின் கிழக்கில் உள்ள லொய்கோ நகரை நோக்கிச் செல்கின்றனர்.
“நமது வீரர்கள் லொய்கோ நகரைச் சேர்ந்தவர்கள். அந்த ஒன்றே எங்களுக்கு ஊக்குவிப்பாக உள்ளது. நமது வீடுகளுக்குச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்,” என்று போராளிகளின் தலைவர் திரு லின் லின் கூறினார்.
2021ஆம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து மியன்மார் முழுதும் உருவான ‘மக்கள் தற்காப்புப் படைக் குழுக்களில் இவரின் குழுவும் ஒன்று.
அவரது குழு லொய்கோ நகரைக் கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மக்களின் தற்காப்புப் படைக் குழுக்களும் சிறுபான்மை இனவாதக் குழுக்களும் லொய்கோ நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல வாரங்களாக மியன்மார் ராணுவத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன.
ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே ஆகாயத் தாக்குதல்கள், வெடிகுண்டுத் தாக்குதல்கள், நகர்ப்புறப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து தப்பியோடிவிட்டதாகப் படைக் குழுக்கள் தெரிவித்தன.
இந்த வாரத் தொடக்கத்தில், சாலைகள் அமைதியாக இருந்ததாகவும் தற்போது ராணுவம் விழிப்புடன் இருப்பதாகவும் திரு லின் லின் கூறினார்.
சீனாவுடனான எல்லைப் பகுதியில் மூன்று சிறுபான்மை இனவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலிலிருந்து அது மீண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் அம்மூன்று குழுக்களும் சில நகரங்களைக் கைப்பற்றியதோடு முக்கிய வர்த்தகப் பாதைகளையும் மறித்தன.