96 மணி நேரத் தண்ணீர் விநியோகத் தடைக்குத் தயாராகும் பினாங்கு

96 மணி நேரத் தண்ணீர் விநியோகத் தடைக்குத் தயாராகும் பினாங்கு

2 mins read
5acaf7bb-6492-448f-8c97-146c9437f38c
பினாங்கின் தொடக்கப்பள்ளி ஒன்றின் உணவக ஊழியர், தண்ணீர் விநியோகத் தடைக்கு முன்னதாக வாளிகளில் நீரை நிரப்பிக்கொள்கிறார். - படம்: த ஸ்டார்/ஏஷிய நியூஸ் நெட்வொர்க்

பட்டர்வொர்த்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்குத் தண்ணீர் விநியோகம் இருக்காது.

பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் இதுகுறித்து முன்னதாக அறிவித்தபோது சுங்கை டுவா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாகங்களை மாற்றும் பணிகளும் வேறு பல இடங்களில் சீரமைப்புப் பணிகளும் நடக்கவுள்ளதாகக் குறிப்பிட்டது.

இதனால் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் இருக்காது என்றும் ஒருசில இடங்களில் தண்ணீர் அழுத்தம் குறைந்திருக்கும் என்றும் நிறுவனம் எச்சரித்திருந்தது.

பினாங்கில் 670,000 பயனாளர்களுக்கு நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. சுங்கை டுவா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பயன்பாட்டுக்கென வரும் நீரை இந்தப் பயனாளர்களில் 70 விழுக்காட்டினர் நம்பியுள்ளனர்.

இதற்கிடையே, இரு பிரதான தண்ணீர்க் குழாய்களை மாற்றும் பணி சவால்மிக்கது என்று பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் யாவ் கூறியிருந்தார்.

இவ்வாறு மாற்றுவதன் நீண்டகால அவசியத்தைப் பொதுமக்கள் புரிந்துகொள்வர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், தண்ணீர் விநியோகத் தடை காரணமாக உணவங்காடி, உணவகக் கடைக்காரர்கள் சிலர் தங்களின் வியாபாரத்தையும் நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளனர்.

தொடர்ந்து கடை நடத்த வேறு சிலரும் திட்டமிட்டுள்ளனர்.

“தினசரி வாடகை கட்ட வேண்டியுள்ளதால் கடைகளைப் பல நாள்களுக்கு மூட முடியாத நிலை,” என்று செபெராங் பிராய் உணவங்காடி, காபி கடை உரிமையாளர்கள் கழகத்தின் தலைவர் தமது 400 உறுப்பினர்கள் குறித்துப் பேசினார்.

தண்ணீர் விநியோகத் தடையின்போது பயன்படுத்துவதற்காகச் சிலர் முன்னதாகவே நீரை நிரப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வியாபார நேரத்தைக் குறைத்துக்கொள்ளும் திட்டத்திலும் சில கடைக்காரர்கள் உள்ளனர்.

தண்ணீர் விநியோகத் தடையால் மில்லியன் கணக்கில் இழப்பு நேரக்கூடும் என்று சுமார் 500 உறுப்பினர்கள் கொண்ட மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனம் எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்