கோலாலம்பூர்: ஒரு ஹெக்டர் காலியான நிலப்பரப்பை மாபெரும் விமானத்துறை மையமாக மாற்றும் திட்டத்தை மலேசியா நேற்று வெளியிட்டது. செபாங்கில் உள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தைச் சுற்றி இந்தப் புதிய மையம் அமையும். இதில் விமானச் சரக்ககம், தளவாடங்கள், விமானச் சேவைகள் போன்றவை உள்ளடக்கப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைச் (KLIA) சுற்றி உள்ள திட்டத்துக்கு 'கேஎல்ஐஏ ஏரோபோலிஸ்' (KLIA Aeropolis) என்று பெயரிடப் பட்டுள்ளது.
மொத்தம் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய மையம் உருவாகிறது என்று மலேசிய விமான நிலையங்கள் நிறுவனம் குறிப்பிட்டது. இந்தத் திட்டத்தை வடி வமைத்துள்ள இந்நிறுவனம், கோலாலம்பூர் நகர மையத்திலிருந்து அரை மணி நேரத் தொலைவில் உள்ள செபாங்கில் கூட்டம், மாநாட்டு வசதிகளையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மலேசியாவின் ஆகப்பெரிய விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன.