பெய்ஜிங்: சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் உள்ள விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடித்ததில் நால்வர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புடோங் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திடீரென்று குண்டு வெடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நால்வர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் விமானச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு அல்ல என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. பிரசல்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து சீனாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புடோங் விமான நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.