டாக்கா: பங்ளாதேஷில் உள்ள பிரபல உணவுக் கடையில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பில் தாக்குதலின்போது போலிசிடம் சிக்கி தடுத்து வைக்கப்பட்ட நபரும் வேறு ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட இருப்பதாக போலிஸ் அதிகாரி ஷைஹிதுல் ஹக் ஏஎஃப்பியிடம் கூறியுள்ளார். மேற்கத்திய பாணியிலான காப்பிக் கடை ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி 20 பேர்களைக் கொன்றதாகக் கருதப்பட்ட அறுவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.
வேறு ஒருவர் விசாரிக் கப்படுவதாக முன்பு கூறப்பட்டது. பங்ளாதேஷில் ஐஎஸ் அமைப்பின் தடம் இல்லை என அந்நாடு தொடர்ந்து மறுத்துவந்தபோதும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பு, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு உள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளது. போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தவர். செல்வம் கொழிக்கும் வீடுகளில் பிறந்து, நல்ல கல்வி வாய்ப்பையும் பெற்றவர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளதென கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் நிப்ராஸ் இஸ்லாம், 22. அவர் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் மலேசிய வளாகத்தில் கல்வி பயின்றார் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரிக் குப் பிறகு அவர் காணாமல் போனதும் அறியப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரான ரோஹன் இமிடியாஸும் மொனாஷ் பல்கலைக் கழகத்தின் மலேசிய வளாகத்தில் கல்வி பயின்றார் எனக் கூறப்படுகிறது. அவரது தந்தை இமிடியாஸ் கான் பபூல் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். டாக்காவின் முன்னாள் இளையர் விவகாரச் செயலாளராகப் பதவி வகித்த அவர், சென்ற ஜனவரியிலிருந்து தம் மகன் காணாமல் போயிருந்ததாகச் சொன்னார். துப்பாக்கிச் சூடு நடத்திய மிர் சாமே முபாஷீர் எனும் 18 வயது நபர் இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வு எழுத இருந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. தமது மகனுக்கு மூளைச்சலவை செய்து மனதை மாற்றியிருக்கலாம் என அவரது தந்தை மிர் ஹயாட் கபிர் கூறினார்.
போலிசாரால் கொல்லப்பட்ட ஐவரில் ஒருவர் மட்டுமே வசதிகுறைந்த குடும்பத்தைச் சார்ந்தவர் எனவும் அவர் கைருல் இஸ்லாம் பாயல் எனவும் அறியப்பட் டுள்ளது. பொதுவாக வசதி குறைந்த நிலையில் இருக்கும் சுய தீவிரவாத நோக்கம் கொண்டவர்களே பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இவ்விளையர்களின் செயல் பற்றி கருத்துரைத்த உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான், "இது நாகரிகமாகி விட்டது," என்றார்.
டாக்காவில் உள்ள உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 20 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்ளாதேஷ் பிரதமர் ஹசீனா (புடவையில்) பங்ளாதேஷுக்கான ஜப்பான் தூதர் வட்னாபியுடன் உரையாடினார். படம்: ராய்ட்டர்ஸ்