சோல்: அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து கொரிய தீபகற்பத்தில் நவீன தற்காப்பு ஏவுகணை முறையை பயன்படுத்த இணக்கம் கண்டுள்ள வேளையில் வடகொரியா அதன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் மேற்கொள்ளவிருக்கும் அந்த நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
நவீன தற்காப்பு ஏவுகணை முறை எந்த இடத்தில் பொருத்தப்படும் என்பது உறுதியாகத் தெரிந்ததும் சரியான பதிலடி கொடுக்கவிருப்பதாக வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு வந்ததும் தென்கொரியாவை மண் மேடாக்கப்போவதாக வடகொரிய ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆசிய, பசிபிக் வட்டாரத்தில் உள்ள தென்கொரிய மற்றும் அமெரிக்க இலக்குகளைத் தாக்கப்போவதாக வடகொரியா அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளது.