கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், அவரது ஆட்சிக் காலத்தில் பேரரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்திய செயலுக்காக தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தான் அன்று செய்த அந்தச் செயலால் இப்போது சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புமன்றச் சட்டமானது, பேரரசரின் ஒப்புதல் இன்றி நடப்புக்கு வந்து விட்டது என்று மகாதீர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டமாவதற்கு பேரரசரின் ஒப்புதலோ, கையெழுத்தோ அவசியமில்லை என்ற நிலை ஏற்பட அந்தச் சட்டத்திருத்தமே வழிவகுத்தது. "அந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்ததற்காக உண்மையில் நான் வருத்தப்படுகிறேன்,"என்று மகாதீர் தமது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டில் மகாதீர் தலைமையிலான அரசாங்கம், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தது.