பேங்காக்: தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ள நரதிவாட் மாநிலத்தில் நேற்று குண்டு வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. நரதிவாட் மாநிலத்தில் தாய்லாந்து=மலேசிய எல்லையை ஒட்டிய டாக் பாய் நகரில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே குண்டு வெடித்ததாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்லும் நேரத்தில் அங்கு குண்டு வெடித்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பள்ளிக்கூடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் ஒரு தந்தையும் அவரது ஐந்து வயது மகளும் உயிரிழந்ததாக அந்த அதிகாரி கூறினார்.
அந்தக் குண்டு வெடிப்பில் 8 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. தாய்லாந்தின் அமைதியை சீர்குலைத்து கலவரத்தை ஏற்படுத்த விரும்பும் சிலரது வேலையாக அது இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். தாய்லாந்தின் சுற்றுலாத் தல நகரங்களை தொடர் குண்டு வெடிப்புகள் உலுக்கிய ஒரு மாதத்திற்குள் மீண்டும் அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
நரதிவாட் மாநிலத்தில் குண்டு வெடித்த இடத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் வேளையில் அப்பகுதியில் ஒரு சிறுமியின் பை காணப்பட்டது. படம்: ஏஎஃப்பி