பெட்டாலிங் ஜெயா: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக வரும் நவம்பர் 19 ஆம் தேதி பேரணி நடத்தவிருப்பதாக பெர்சே அமைப்பு தெரிவித்துள்ளது. திரு நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தப் பேரணிக்கு பெர்சே ஏற்பாடு செய் துள்ளது. பேரணிக்கு முன்னதாக தேசிய அளவில் பிரசார இயக்கம் அக்டோபர் முதல் தேதி தொடங்கி ஏழு வாரங்களுக்கு நீடிக்கும் என்று பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவி மரியா சின் அப்துல்லா நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். 1எம்டிபி தொடர்பில் திரு நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த பிரசார இயக்கம் மேற்கொள்ளப் படவிருப்பதாகவும் அவர் சொன்னார். மலேசியாவில் பல நகரங் களில் பிரசார இயக்கத்தை பெர்சே மேற்கொள்ளவிருக்கிறது.
அடுத்த மாதம் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி பேரணி நடைபெறும் வரை பெர்சே வாகனங்கள் நாடு முழுவதும் பயணம் செல்லவிருப்பதாக மரியா சின் கூறினார். 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் சில அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை வழக்குத் தொடுத்துள்ள நிலையில் "மலேசிய அதிகாரி 1" என்று அமெரிக்கா குறிப்பிட்டிருப்பது திரு நஜிப்பாக இருக்கலாம் என்ற யூகத்தை மலேசிய மூத்த அமைச்சர் ஒருவரின் அறிக்கை உறுதிப் படுத்தி இருப்பதாக திருமதி மரியா சின் கூறினார். "மலேசிய அதிகாரி 1" என்று அமெரிக்கா குறிப்பிட்டிருப்பது திரு நஜிப்பைத் தவிர வேறு யாருமல்ல என்றும் ஆனால் அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்பதால் புலன் விசாரணையில் அவர் சம்பந்தப்படவில்லை என்றும் மலேசிய அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லன் இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
நியாயமான அதே நேரத்தில், ஜனநாயக முறையிலான தேர்தலை வலியுறுத்துவதற்காகவும் இந்தப் பேரணி நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பெர்சே அமைப்பு நடத்தவுள்ள ஐந்தாவது பேரணி இது. இம்முறை பேரணியின் கருப்பொருள் 'ஆற்றைலை ஒன்றிணைப்போம், புத்தம்புது மலேசியா' என்ப தாகும். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் இதர அரசியல் தலைவர்களுக்கும் பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருப்பதாகவும் திருமதி மரியா சின் கூறினார். சென்ற ஆண்டு பெர்சே ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 200,000 பேர் கலந்து கொண்டனர்.