தோக்கியோ: கூடுதல் வேலைப்பளு காரணமாக ஜப்பானிய ஊழியரணியில் ஐந்தில் ஒருவர் மரணத்தை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாக ஜப்பானிய அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வேலைப்பளுவினால் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை பலருக்கு ஏற்படுவதாகவும் வேலை அழுத்தம் காரணமாகச் சிலர் உயிரை மாய்த்துக்கொள்வ தாகவும் கூறப்படுகிறது. வேலைப்பளு காரணமாக மரணம் நிகழ்வது குறித்து ஜப்பானில் வெளியிடப்பட்ட முதல் வெள்ளை அறிக்கையின் ஓர் அங்கமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அமைச்சரவை இந்த அறிக்கைக்கு சென்ற வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிற நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் ஜப்பானியர்கள் அதிக நேரத்தை வேலையில் செலவிடுவதை அந்த ஆய்வு காட்டுகிறது. சென்ற ஆண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை இந்த ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 22.7%, தங்களது ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் 80 மணி நேரத்துக்கும் மேலாக 'கூடுதல் நேர வேலை' செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.