கோலா கங்சார்: குழு மேம்பாட்டுப் பயிற்சி என்று கூறி, 10 முதல் 12 வயதிற்குட்பட்ட பள்ளிச் சிறாரை பாம்புகள் இருக்கும் சேற்றுக் குளத்தில் இறங்கச் செய்த விவகாரத்தில் பயிற்றுவிப்பாளர்கள், உதவியாளர்கள் என பத்துப் பேரை பேராக் குடிமைத் தற்காப்புப் படை இடைநீக்கம் செய்துள்ளது. கோலா கங்சாரில் உள்ள குடிமைத் தற்காப்புப் படை தலைமையகத்தில் பெலுரு தேசிய பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை அந்தப் பள்ளியும் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்று நாள் முகாமின்போது, அங்குள்ள ஒரு சேற்றுக் குளத்தில் இறங்கும்படி மாணவிகள் அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் இறங்கிய பின்னரே அந்தக் குளத்திற்குள் இரண்டு மலைப்பாம்புகள் இருப்பதைப் பயிற்றுவிப்பாளர்கள் கூறினர். இதைக் கேட்டதும் அந்தச் சிறுமிகள் அலறினர்; அழுது அரற்றினர்.
இச்சம்பவம் குறித்த காணொளி வேகமாக இணையத்தில் பரவ, அதைப் பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதாகவும் தற்காலிகமாக அத்தகைய பயிற்சி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது. காணொளிப் படம்: தி ஸ்டார்