இஸ்லாமாபாத்: உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக இந்தியா மூவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, இந்தியத் தூதரக அதிகாரி சுர்ஜித் சிங்கை தங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அந்நாட்டின் தூதரக அதிகாரியை இந்தியா கைது செய்ததற்குப் பழிக்குப் பழி வாங்கும் எதிர் நடவடிக்கையாக இந்தியத் தூதரக அதிகாரியை 48 மணி நேரத்துக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவு அதி காரி மெகமூத் அக்தர், இந்தி யாவில் உளவு பார்த்த குற்றச் சாட்டின் கீழ் கைதானார். அவரை 48 மணி நேரத்துக்குள் பாகிஸ் தானுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
பணத்துக்காக ராணுவ ரகசியங்களை மெகமூத் அக்த ரிடம் விற்றதாக மேலும் இருவரை யும் போலிசார் கைது செய்தனர். மெகமூத் அக்தரிடம் இருந்து இந்திய ராணுவ நிலைகள் அமைந்திருக்கும் வரைபடங்கள், இந்தியப் படைகளின் நடமாட்டம், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஆகிய அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவின் இந்நடவடிக்கைக்குப் பழிவாங்கும் வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியான சுர்ஜித் சிங் என்பவரை விரும்பத் தகாதவர் என அறிவித்து, அவரை 48 மணி நேரத்துக்குள் பாகிஸ் தானை விட்டு வெளியேற வேண் டும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அதிரடி யாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஐஜாஸ் சவுத்ரி பாகிஸ்தானுக்கான இந்திய உயர் தூதர் கவுதம் பம்பாவாலேவுக்குத் தெரிவித்து விட்டதாகவும் இன்று 29ஆம் தேதிக்குள் சுர்ஜித் சிங்கை நாட்டைவிட்டு வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தரிடம் ரகசிய ஆவணங்களைப் பணத்துக்கு விற்றதாக டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்ட சுபாஷ் ஜாங்கிர் (இடம்), மவுலானா ரம்ஸான். படம்: ஊடகம்