காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலத்தில் ஓர் ராணுவத் தளத்திற்கு அருகே கார் குண்டு வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு தலிபான் குழு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. அத்தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த கடும் சண்டையில் போராளிகள் நால்வரும் கொலப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நேட்டோ தலைமையிலான கூட்டணிப் படை 2014ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிய பின்னர் அந்நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு ராணுவத்தினரையும் போலிஸ் படையையும் குறிவைத்து தலிபான் போராளிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போராளிகளின் சதித் திட்டங்களை முறியடிக்க ஆப்கான் பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.