தைப்பே: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தைவான் வந்துசேர்ந்த ஒரு பெண்ணின் பயணப் பெட்டிக்குள் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் பணியில் இல்லாத போலிஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் பயணப் பெட்டிக்குள் துப்பாக்கி இருந்ததை லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலைய அதிகாரிகள் கவனிக்கத் தவறி விட்டதாக தைவானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தைப்பே நகரில் அப்பெண் மற்றொரு விமானத்திற்கு மாறியபோதுதான் அவரது பெட்டிக்குள் ஒரு துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பெண் தைவானை விட்டுச்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் தைவானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தச் சம்பவம் பற்றிக் கூறிய அமெரிக்க அதிகாரிகள், லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றபடவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். 42 வயதான அந்த அமெரிக்கப் பெண் தைவானில் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒழுங்கு நடவடிக்கை சார்ந்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.