பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான 1எம்டிபி நிறுவனத்தின் களவு போனதாகக் கூறப்படும் நிதியில் கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க டாலர் (S$41.5 மில்லியன்) பணத்தை நகைகள் வாங்குவதற்கு மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் பயன்படுத்தி யதாக அமெரிக்க நீதித்துறை ஆகக்கடைசியாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப் பட்டுள்ளது. திரு நஜிப்பின் பெயரோ அல்லது அவரது மனைவியின் பெயரோ அந்த மனுவில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. "மலேசிய அதிகாரி 1" யின் மனைவி நகைகள் வாங்குவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
"மலேசிய அதிகாரி 1" என்பது திரு நஜிப்பையே குறிக்கிறது என்பதை மலேசிய, அமெரிக்க அரசாங்கத் தகவல்கள் ஏற்கெனவே உறுதிப் படுத்தியுள்ளன. 1எம்டிபி நிறுவனம் தொடர்பான சொத்து களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கையை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் பத்திரிகை செயலாளர் கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்க நீதித்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மலேசிய அரசாங்கம் அல்லது 1எம்பிடியின் ஒத்துழைப்பைப் பெற அமெரிக்கா தவறி விட்டதாகவும் திரு நஜிப்பின் பத்திரிகை செயலாளர் ஷரிஃபுதின் அகமட் குற்றம் சாட்டியுள்ளார்.