பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஒரு சந்தேக நபர் கீழ்த் தளத்தில் தன் கையில் வைத் திருந்த சிறிய பெட்டியை வெடிக்கச் செய்ததைத் தொடர்ந்து அந்த நபரை போலிசார் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் 36 வயதுடையவர் என்றும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பெரிய அளவில் தாக்குதல் நடத்த அந்த சந்தேக நபர் திட்டமிட்டிருந்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் பெல்ஜியப் போலிசார் கூறினர். அந்த ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிறிய கைப் பெட்டியை வெடிக்கச் செய்த பின் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற அந்த நபரை போலிசார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை. ஆனால் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் சிறிய அளவில் தீ பரவியதாகக் கூறப்பட்டது. அந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்பதை போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரசல்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தினுள் நுழைந்த சந்தேக நபர் கைப்பெட்டிக்குள் வைத்திருந்த சிறிய வெடிகுண்டை வெடிக்கச் செய்ததைத் தொடர்ந்து அந்த நபரை போலிசார் சுட்டுக் கொன்றனர். அதன் பின்னர் அந்த ரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள முக்கிய சாலைப்பகுதியை சுற்றி வளைத்த போலிசாரும் ராணுவ வீரர்களும் பொதுமக்களுக்கு உதவுகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் 36 வயதுடையவர் என்றும் மொரோக்கோ நாட்டவர் என்றும் போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி