பேங்காக்: தாய்லாந்தில் அரிசி மானியத் திட்டம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர மீதான வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வழங்கப்படும் என்று தாய்லாந்து நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறி யுள்ளார். திருவாட்டி யிங்லக் பிரதமராக இருந்தபோது அரிசி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் கீழ் விவசாயி களிடமிருந்து அரிசியை சந்தை விலைக்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கி அந்த அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்தார். இத்திட்டத்தால் விவசாயிகளும் ஏழை மக்களும் நன்மை அடைந்த போதிலும் அரசாங்கத்திற்கு 18 மில்லயன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கு திருவாட்டி யிங்லக்தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் உள்பட பலர் குறை கூறினர். அவருக்கு எதிராக தாய்லாந் தில் ஆர்ப்பாட்டங்கள் பல மாதங்களாக நீடித்தன. இதனால் 2014ஆம் ஆண்டு ராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் யிங்லக் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் அரிசி மானியத் திட்டத்தை கவனிப்பதில் கவனக் குறைவாக இருந்ததாக திருவாட்டி யிங்லக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவந்த நிலையில் நேற்றைய விசாரணை இறுதி விசாரணையாகும். அதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்த திருவாட்டி யிங்லக்கை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண் டனர். வரும் ஆகஸ்ட் முதல் தேதி உச்சநீதிமன்றத்தில் திருவாட்டி யிங்லக் தமது இறுதி வாதத்தை முடித்துக்கொள்ளவிருக்கிறார்.