மலேசியாவின் அடுத்த மாமன்னராக அரியணை ஏறும் பாஹாங் மாநில சுல்தான் அப்துல்லா ரி'அயட்டுடினுக்கு அந்நாட்டு நாடாளுமன்றச் சதுக்கத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மாநில ஆட்சியாளர் மாநாட்டில் அந்த 59 வயது மன்னர் கடந்த வாரம் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுல்தான் அப்துல்லாவும் அவரது துணைவியாரும் இன்று காலை 10.05 மணிக்கு மலேசியாவின் நாடாளுமன்றக் கட்டடத்தை அடைந்தனர். அவர்களை மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதும் அவரது மனைவி சிட்டி ஹஸ்மா முகம்மதும் வரவேற்றனர். மலேசியத் துணைப்பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மைலும் அவரது கணவர் அன்வார் இப்ராஹிமும் இதர அமைச்சர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஜனவரி 6ஆம் தேதி மாமன்னர் பதவியைத் துறந்த சுல்தான் ஐந்தாம் முகம்மதிற்கு அடுத்து சுல்தான் அப்துல்லா இப்பதவியை ஏற்கிறார்.