ஈரானின் புரட்சிப் படையினரைக் குறிவைத்த வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 27 படை அதிகாரிகள் மாண்டுவிட்டனர். அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சிஸ்தான் மாநிலத்தில் இச்சம்பவம் நேர்ந்துள்ளது.
எல்லைக்காவலில் இருந்து துருப்பினர் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நிகழ்ந்ததாகப் புரட்சிப் படையினர் அறிக்கை ஒன்றின் வாயிலாகக் கூறியுள்ளனர். உலகத்தை அடக்கி ஆள நினைப்பவர்களும் யூத தாயக இயக்கத்தவரும் இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானில் நடைபெற்றுவரும் இஸ்லாமியப் புரட்சியின் 40 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களைக் குலைக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புரட்சிப் படையினர் கூறினர்.
ஈரானின் முன்னையப் பெருந்தலைவர் ருஹொல்லா ஹோமெய்னி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்ட பிறகு தலைநகர் தெஹ்ரானுக்குத் திரும்பி அந்நாட்டு மன்னரின் ஆட்சியைக் கவிழ்த்ததை இந்தப் புரட்சி கொண்டாடுகிறது.
தாக்குதலில் கருகிப் போன பேருந்து சிதைவுகளைக் காட்டும் படங்களை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
போலந்தில் அமெரிக்காவும் மேலும் 60 நாடுகளும் ஈரான் விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடக் கூடியிருக்கும் அதே நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது தற்செயல் அல்ல என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவட் சரிஃப் தெரிவித்திருக்கிறார்.