இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றநிலையைக் குறைக்க சீனா ஆக்கப்பூர்வமான முறையில் பங்காற்றியதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வழி மோதல் தணிந்து அமைதிநிலை நிலைநாட்டப்பட்ட பிறகு சீனா இவ்வாறு கூறுகிறது.
பதற்றம் உச்சத்தை எட்டியபோது, பாகிஸ்தான் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சப்போவதாக இந்தியா மிரட்டியிருந்தது. பதிலுக்கு, தானும் ஏவுகணைகளை விடப்போவதாக பாகிஸ்தான் அறைகூவல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பதற்றநிலையைத் தணிக்க சீனாவும் ஐக்கிய அரபுச் சிற்றரசும் தலையிட்டதாக பாகிஸ்தானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் அனைத்துத் தரப்புகளின் நன்மைக்கே என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சீனா அண்டை நாடாக மட்டுமின்றி நட்பு நாடாகவும் உள்ளது. எனவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்க சீனா முனைப்புடன் பங்காற்றியது," என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. வேறுபாடுகளைக் களைய அமைதிப் பேச்சுகளில் ஈடுபடுமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஊக்குவிக்க அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து செயல்பட சீனா விரும்புவதாகவும் அமைச்சு கூறியது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியை செவ்வாய்க்கிழமை (19 மார்ச்) சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.