ஈரான் தடுத்துவைத்துள்ள பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால் அந்நாடு கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார தடையை மீறி, சிரியாவுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றதாக ஈரானின் ‘கிரேஸ் 1’ கப்பலை, இம்மாதம் 4ஆம் தேதி பிரிட்டன் சிறைபிடித்தது.
ஜிப்ரல்டார் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக் கப்பலுக்கான தடுப்புக்காவல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளின் அடிப்படையில், அந்தக் கப்பலை விடுவிக்கத் தயாராக இருப்பதாக பிரிட்டன் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பிரிட்டனின் ‘ஸ்டெனோ இம்பெரோ’ என்ற எண்ணெய் கப்பலை ஈரானிய ராணுவம் ஹோர்முஸ் நீரிணையில் நேற்று முன்தினம் தடுத்துவைத்தது.
அந்தக் கப்பலில் பணியில் இருந்த 18 இந்திய மாலுமிகள் உட்பட 23 பேரும் ஈரான் வசம் உள்ளனர். மற்றவர்கள் ரஷ்யா, லத்வியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஸ்டெனா இம்பெரோ கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அது தெரிவித்தது.
பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஸ்டெனோ இம்பெரோ கப்பல் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதோடு சேர்த்து, லைபிரியாவின் ‘எம்.வி. மெஸ்டார்’ என்ற கப்பலையும் சிறைபிடித்ததாகவும் ஆனால் அதை எச்சரித்து அனுப்பி வைத்துவிட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஈரான், தங்கள் நாட்டு மீன்பிடி படகு மீது பிரிட்டிஷ் கப்பல் மோதியதாகவும் எச்சரிக்கை விடுத்தபோதும் அது நிற்காமல் சென்ற காரணத்தால் அதை சிறைபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
விசாரணை முடியும் வரை ஸ்டெனோ இம்பெரோ கப்பல் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் வெளிப்படுத்தியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்ட், தங்களது நாட்டுக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாடினார். சுதந்திரமான கடற்பயணத்தை பேணிக்காப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
அனைத்துக் கப்பல்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பயணம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் திரு ஹண்ட் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை இப்போதே தீர்க்கப்படவில்லை என்றால் அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று திரு ஹண்ட் ஈரானை எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இதுதொடர்பாக பிரிட்டனிடம் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.