பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள், அந்நாட்டில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையைக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் மறைத்துவிட்டதாக அவர் சொன்னார்.
அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு இம்ரான் கான், தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தீவிரவாத அமைப்புகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா முன்னதாக வலியுறுத்தி வந்தபோது, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தமது நாடு இருந்ததாக அவர் கூறினார்.
தீவிரவாத அமைப்புகள் அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில், தம்மைப் போன்றவர்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்த அவர், உண்மையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமமாக இருந்த காலகட்டம் அது என்று சொன்னார்.
(முழுச் செய்தி, நாளைய அச்சுப் பிரதியில்.…)