கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த இருபது விமானச் சேவைகள் தாமதமடைந்துள்ளன. பயணப்பதிவு முகப்புகளில் சேவைத் தடைகள் ஏற்பட்டதால் எமிரேட்ஸ், ஏஎன்ஏ உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் புறப்படத் தாமதமாயின.
விமான நிலையத்தின் பிரதான முனையமும் மலிவுச் ‘கேஎல்ஐஏ2’ என்ற சேவை முனையமும் இந்தச் சேவைத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த முனையங்களை இயக்கும் ‘மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பர்ஹாட்’ (எம்ஹெச்ஏபி) தெரிவித்தது.
“இந்தச் சேவைத்தடையின் பாதிப்பைச் சமாளிக்க எங்கள் ஊழியர்கள் மணிக்கணக்காக வேலை செய்துகொண்டிருந்தனர். பிரச்சினைகளையும் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும் நாங்கள் முயன்றோம்”என்றது எம்ஹெச்ஏபி.
காலை 10.41 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளும் பழுது நீங்கி தற்போது அவை வழக்கம் போல இயங்கி வருவதாக அந்த அமைப்பு சொன்னது.