பாரிஸ்: பணி நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்தபோது அறிமுகமான பெண்ணுடன் உடலுறவு கொண்டபின், மாரடைப்பு ஏற்பட்டு மாண்டதை பணியின்போது நிகழ்ந்த விபத்தாகக் கருதி, அவர் வேலை செய்த நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2013ஆம் ஆண்டு நிகழ்ந்தது. திரு சேவியர் என்ற அந்த ஆடவர், ‘டிஎஸ்ஓ’ என்ற ரயில் தண்டவாளம் அமைக்கும் நிறுவனத்தில் தொழில்நுட்பராகப் பணிபுரிந்து வந்தார்.
முன்பின் தெரியாத ஒருவருடன் உறவுகொண்டதைப் பணியில் இருந்ததாகக் கருதக்கூடாது என அந்த நிறுவனம் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்து, திரு சேவியரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும்படி கடந்த மே மாதத்தில் கீழ்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ‘டிஎஸ்ஓ’ மேல்முறையீடு செய்ய, அதிலும் அந்நிறுவனத்திற்குத் தோல்வியே கிடைத்தது.