வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், தனது அரசியல் எதிரியான ஜோ பைடனுக்குப் பரிந்து பேசியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை வடகொரியா மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது.
அப்போது பைடனை “வெறிபிடித்த நாய்” என்றும் அவரைக் கட்டையால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பது வடகொரியாவுக்கு வழக்கம் என்பது உலகமறிந்த ஒன்று. என்றாலும் பைடனைச் சாடிய வடகொரியாவின் வார்த்தைகள் சற்று அதிகம் எனும் வகையில் டுவீட் செய்துள்ளார் டோனால்ட் டிரம்ப்.
அதில் அவர், “வடகொரியா சொல்வது போல் பைடன் வெறித்தனமான நாய் அல்ல. உண்மையில் அவர் அதைவிட கொஞ்சம் நல்லவர்,” என்று குறிப்பிட்டிருந்தார்.