நியூயார்க்: மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள சைபான் எனும் தீவு, குழந்தைப் பிறப்புச் சுற்றுலாவிற்கு பெயர்பெற்றது. அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்ட அந்தத் தீவிற்குச் செல்லவிருந்த பயணி ஒருவரைக் கட்டாய கர்ப்பச் சோதனைக்கு உட்படுத்தியதற்காக ‘ஹாங்காங் எக்ஸ்பிரஸ் ஏர்வேஸ்’ நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தக் கட்டாய கர்ப்பச் சோதனை நடைமுறையை மறு ஆய்வு செய்து, அதனைக் கைவிட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப் பட்ட மிடோரி நிஷிடா என்ற அந்தப் பெண், தமக்கு நேர்ந்த இன்னல் குறித்து வலைப்பதிவில் எழுத, விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, அந்தச் சோதனையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.