வாஷிங்டன்: 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக திகழ்ந்த ஹஃபீஸ் சையதுக்கு சிறைத் தண்டனை விதிப்பதில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள அமெரிக்கா, இந்த அசம்பாவித சம்பவத்திற்கு லக்ஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைப் பொறுப்பேற்க வைப்பதில் இந்த நடவடிக்கை முதல் படி என்று வர்ணித்துள்ளது.
அதே வேளையில், உலகை அச்சுறுத்தும் பயங்ரவாதத்தை முற்றிலுமாக முறியடிப்பதில் பாகிஸ்தானுக்கு இது முக்கிய மைல்கல் என்றும் அமெரிக்கா கூறியது.
166 பேரின் உயிரைப் பலிவாங்கிய தாக்குதலுக்கு ஹஃபீஸ் சையதின் பயங்ரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியிருந்தன.
பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தொடர்பில் ஹஃபீஸ் சையதுக்கு நேற்று முன்தினம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.