லண்டன்: பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டனில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டினர் புள்ளிகள் அடிப்படையிலான குடிநுழைவு முறையில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிரிட்டனில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் ஐரோப்பிய ஊழியர்களைச் சார்ந்திருக்கும் நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அந்நாடு கூறியது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உயர் திறன் ஊழியர்கள் பிரிட்டனில் வேலை செய்ததால் பிரிட்டிஷ் மக்கள் கிடைக்க வேண்டிய வேலைகள் கிடைக்காமல் போனதாக அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று 2016ஆம் ஆண்டில் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தததற்கு இதுவும் ஒரு காரணம்.
புதிய முறையின்படி குறிப்பிட்ட திறன்கள், தகுதிகள், துறைகள் ஆகியவற்றுக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.
போதுமான புள்ளிகள் இருந்தால் மட்டுமே பிரிட்டனில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு விசா வழங்கப்படும்.
இந்தப் புதிய அணுகுமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மற்ற நாடு
களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே விதிமுறை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பிரிட்டனில் உள்ள பல நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதாகவும் புதிய அணுகுமுறையால் விவசாயம், நோயாளிப் பராமரிப்பு போன்ற வேலைகளுக்கு போதுமான ஊழியர்கள் இல்லாமல் போகும் சாத்தியம் இருப்பதாக வர்த்தக அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதனால் பிரிட்டனில் பொருளியல் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் என்று அவை தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுப்பயணி என்கிற முறையில் ஆறு மாதம் வரை பிரிட்டனில் இருக்க விசா தேவையில்லை.
குடியேறிகளின் எண்ணிக்கையை பிரிட்டன் குறைக்க விரும்புகிறது.