வாஷிங்டன்: மோசடி, ஊழல், பொய் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைவாசம் அனுபவித்து வந்த அரசியல், விளையாட்டு, வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேந்த சிலருக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
நண்பர்கள், வர்த்தகப் பங்காளிகள் தந்த ஆலோசனையின்படி இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையின் விளைவாக 1980களில் ஜங்க் பாண்ட் கிங் என்றழைக்கப்பட்ட நிதியாளர் திரு மைக்கல் மில்கன், நியூயார்க் நகரத்தின் முன்னாள் போலிஸ் ஆணையர் திரு பெர்னட் கெரிக், சான் ஃபிரான்சிஸ்கோ 49ers எனும் அமெரிக்க பாணி காற்பந்தாட்ட குழுவின் முன்னாள் உரிமையாளர் திரு எட்வர்ட் டிபார்டோலோ முதலியோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
இலினோய் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்தவருமான திரு ரோட் பிலாகோஜேவிச்சின் தண்டனைக்காலத்தை அதிபர் டிரம்ப் குறைத்தார். இதனால் திரு பிலோகோஜேவிச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இவர்கள் அனைவரும் அரசியல், நிதி தொடர்பாக குற்றம் புரிந்தவர்கள். திரு டிபார்டோலாவுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
மற்ற மூவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது உயர் கூட்டரசு கொள்முதல் அதிகாரியாக இருந்த திரு டேவிட் சஃபாவியானையும் அதிபர் டிரம்ப் மன்னித்தார்.
விசாரணையின்போது பொய் சொன்னதற்காகவும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சியினர் சாடியுள்ளனர்.
“வரிப் பணம் செலுத்தாமல் ஏமாற்றியவர்கள், பங்குச் சந்தை தொடர்பில் மோசடி செய்தவர்கள், பில்லியன்கணக்கான சொத்து வைத்திருக்கும் செல்வந்தர்கள், ஊழல்மிக்க அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு அதிபர் டிரம்ப் மனிப்பு வழங்கியுள்ளார்.
“இதற்கிடையே, வன்முறையற்ற போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர வர்க்க இளையர்கள் சிறையில் வாடுகின்றனர். இது ஒழுங்காக செயல்படாத, இனப் பாகுபாடு காட்டும் நீதித் துறையைக் காட்டுகிறது,” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.