பாகிஸ்தானிலும் தற்போது கொரோனா கிருமித்தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உலகையே அச்சுத்தி வரும் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 16,500க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 381,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்று 892 பேருக்கு பரவி உள்ளது. அங்குள்ள சிந்த் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலேயே சிந்த் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் அங்கு சுமார் 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்த மருத்துவர் உஷாமா ரியாஸ், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
பலரையும் கிருமித்தொற்றில் இருந்து காப்பாறிய மருத்துவரே கொரோனா தாக்குதலுக்கு பலியானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
#பாகிஸ்தான் #கொவிட்-19