பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஒ-சா நாடு முழுவதும் அவசரநிலை அறிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 107 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதால் தாய்லாந்து பிரதமர் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள் ளார். புதன்கிழமை நள்ளிரவு அமலுக்கு வரும் அவசரநிலை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.
தாய்லாந்துக்குள் விமானம், நிலம், கடல் வழியாக நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொருள் ஏற்றுமதி/ இறக்குமதி, தூதர்கள், வேலை அனுமதிச் சீட்டு வைத்துள்ள ஊழியர்கள், தாய்லாந்து குடிமக்கள் ஆகியோருக்குப் பயணத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதிகள், விளையாட்டு திடல்கள், உடற்பிடிப்பு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற இடங்களில் அதிக மக்கள் கூடுவதால் அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரநிலை சட்டத்தின் கீழ் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து ஆகியவற்றை பதுக்குவது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எளிதில் கிருமித் தொற்றுக்கு ஆளாகி விடுவார்கள் என்பதால் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.