வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று மரணங்கள் 1000க்கு மேல் தாண்டிவிட்டன. இது போதாதென்று அந்நாட்டில் கொரோனா கிருமி தொடர்ந்து பரவி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிப்ரவரி 29ல் முதல் மரணம் நிகழ்ந்து வருகிறது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களில் மரண அளவு கிடுகிடுவென கூடிவிட்டது.
கொரோனாவைத் துடைத்து ஒழிக்க மிகப்பெரிய அளவில் பொது சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறும் சூழலில் மரணங்களைத் தடுக்க இயலவில்லை.
அமெரிக்காவில் செவ்வாய்க் கிழமை மரண எண்ணிக்கை 600 ஆக இருந்தது. புதன்கிழமை பலி 900 பேராகி வியாழக்கிழமை 1050க்கு உயர்ந்து விட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மாநிலங்களிலும் நகரங்களிலும் வீட்டிலேயே இருக்கும்படி மக்களுக்கு உத்தரவு இடப் பட்டுள்ளது. பல பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ள நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்று கூடிவருகிறது.
அமெரிக்காவில் கொரோனா கிருமியால் 69,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வேளையில், நியூயார்க் நகரில் கொரோனா கிருமித்தொற்று மரணங்கள் இன்னமும் அதிகரித்து வருவதாக அரசாங்க இணையத் தளம் புதன்கிழமை அபாயச் சங்கு ஊதியது.
அந்த நகரில் விளையாட்டுத் திடல்களை மூடிவிட நகர ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நகர வீதிகளைப் போக்குவரத்துக்கு மூடிவிடலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
அந்த மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி 30,611 பேரை கொரோனா கிருமிகள் தொற்றி இருந்தன. புதன்கிழமை புதிதாக 5,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
நியூயார்க் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,000 பேர் உடலில் கிருமி புகுந்துள்ளது.
அந்த நகரில் 17,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்காரணமாக நியூயார்க் நகரில் ஏறக்குறைய 199 பேர் மாண்டுவிட்டனர்.
இதனிடையே, அதிகரிக்கும் கொரோனா கிருமிகளைக் கையாள அமெரிக்காவின் செனட் சபை, US$2 டிரில்லியன் உதவித் திட்டத்தை அங்கீகரித்தது.
அதில் மருத்துவமனைகளுக்கும் மருந்தக நிலையங்களுக்கும் ஒதுக்கப்படும் US$ 150 பில்லியன் தொகையும் அடங்கும்.