நியூயார்க்: கொரோனா கிருமி தொற்றிய 25 விழுக்காட்டினர், அதனால் எவ்விதத் தொந்தரவும் அறிகுறிகளும் இல்லையென்பதால் தங்களுக்கே தெரியாமல் பலருக்கு கிருமியைப் பரப்பி வருகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய விளைவு மிகமோசமானதாக இருக்கும். அவர்களால் கிருமிப்பரவல் பெருமளவு அதிகரிக்கலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுபோன்றவர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது குறித்து அந்த நிலையம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் கிருமிப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
காய்ச்சல், இருமல் போன்ற எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் சிலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லாமல் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை புதிய ஆய்வு காட்டுவதாக டாக்டர் ராபர்ட் கூறினார். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பலருக்குக் கிருமித் தொற்றை பரப்பிய பின்னர் அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் வரத் தொடங்கலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் இதுபோன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்று அந்த ஆய்வாளர்கள் கூறவில்லை என்றார் டாக்டர் ராபர்ட்.