வாஷிங்டன்: நங்கூரமிட துறைமுகம் கிடைக்காத இரு சொகுசுக் கப்பல்களுக்கு ஃபுளோரிடா துறைமுகத்தில் இடம் தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஸேன்டம், ரோட்டர்டாம் ஆகிய சொகசுக் கப்பல்கள் அமெரிக்கக் கடற்பகுதிக்குள் வரவிருக்கின்றன.
ஸேன்டம் சொகுசுக் கப்பலில் உள்ள பல பயணிகளுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல துறைமுகங்கள் அக்கப்பலை ஏற்க மறுத்துவிட்டன. இவ்விரண்டு கப்பல்கள் ஃபுளோரிடா துறைமுகத்தில் நங்கூரமிட்டதும் அவற்றுக்குள் மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்படுவர் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
கப்பல்களில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் வெளிநாட்டினர் அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் திரு டிரம்ப் கூறினார்.
போர் விமானங்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பலான ரூசவெல்ட்டில் கொரோனா கிருமித்தொற்றால் 93 கடலோடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கப்பலில் உள்ள கடலோடிகளை அமெரிக்கக் கடற்படை வெளியேற்றி வருவதாக வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர், மரணமடைந்தோர் ஆகியோர் தொடர்பான உண்மையான எண்ணிக்கையை சீனா மறைத்திருக்கும் சாத்தியம் இருப்பதாக அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சீனா வெளியிட்ட பாதிப்படைந்தோர், மரண எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அவை நம்பும்படி இல்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், சீனாவுடன் அமெரிக்காவின் உறவு வலுவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.